தொல்லியல்

தமிழக வரலாற்றுக்கு அடிப்படையான தொல்லியல் சான்றுகளை தமிழகத்தில் பல்வேறு இடங்களில் நடைபெற்ற அகழ்வாராச்சிகள் அளிக்கின்றன. கல்வெட்டுகள், செப்பேடுகள் போன்றவை பண்டைய மன்னர்கள் பற்றியும், அவர்கள் முன்னோர்கள் பற்றியும், மற்றும் அவர்களது வீரச் செயல்கள், நாட்டு பரப்பு பற்றியும் அறிந்து கொள்ள பெரும்பாலும் உதவி செயகின்றன எனலாம்.

நமது வரலாற்றை, வரலாற்றுக்கு முந்தைய காலம் (PRE HISTORIC PERIOD ) மற்றும் வரலாற்றுக் காலம் (HISTORIC PERIOD ) எனப் பிரித்து ஆய்வு செய்கிறோம். பழைய கற்கால மனிதன் பல லட்சம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த, திருவள்ளுர் மாவட்டம் பூண்டி நீர்த்தேக்கம் அருகில் உள்ள குடியம் குகை மற்றும் அத்திரம்பாக்கம், வடதுரை போன்ற இடங்களில் ஆற்றின் கரைகளிலும் அகழாய்வுகள் மேற்கொள்ளப்பட்டு கற்கால மனிதன் பற்றிய சான்றுக் கிடைத்துள்ளன.

அண்மையில், பூண்டிக்கு அருகில் பரிக்கும் என்ற இடத்தில் தமிழ்நாடு தொல்லியல் துறை அகழாய்வினை மேற்கொண்டது. இங்கு கற்கால மனிதன் கல் ஆயுதங்களை தயாரிப்பதற்குரிய இடமாக (Factory Site ) விளங்கியிருக்க வேண்டும் என்பதை அறிய முடிகிறது. அடுத்து வரும் நுண்கற்காலக் கருவிகள் (Microlithic Tools ) தமிழகத்தின் தென்பகுதியில் "தேரி' எனப்படும் கடற்கரையை ஒட்டிய சிறப்பு நிற மணற்பகுதியிலும், தாமிரபரணி ஆற்றின் கரையிலும் கிடைத்துள்ளன.

கற்கருவிகளின் அமைப்பு ஒற்றுமையை ஆய்வு செய்த பொழுது தமிழகத்திற்கும், இலங்கைக்கும் 6,000 ஆண்டுகளுக்கு முன்பே தொடர்பு கொண்டிருந்ததை அறிய முடிந்தது. தமிழகத்தில் திருத்தங்கள், டிகல்லுப்பட்டி, தேரிருவேலி, மாங்குடி, மயிலாடும் பாறை போன்ற இடங்களில் நடைபெற்ற அகழாய்வுகளின் மூலம் இக்கால பண்பாடு பற்றி அறிய முடிகிறது.

மனிதன் முதலில் உணவினை சேகரிக்க தொடங்கினான். பின் ஓரிடத்தில் நிலையாகத் தங்கி உணவு உற்பத்தி செய்ய தொடங்கிய மனித நாகரிகத்தின் வளர்ச்சியை புதிய கற்காலத்தில் (Neolithic Age ) காணலாம். தமிழகத்தில் தர்மபுரி, சேலம், வேலூர் போன்ற மாவட்டங்களில் புதிய கற்கால பண்பாட்டுக்கான சான்றுகள் அதிக அளவில் கிடைத்துள்ளன.

பைம்பள்ளி, அப்புக்கல்லு, மல்லப்பாடி, குட்டூர் மலை, மோதூர் போன்ற இடங்களில் நடைபெற்ற அகழாய்வுகளின் புதிய கற்காலத்தைச் சேர்ந்த மனிதன் வாழ்ந்த வீடு, பயன்படுத்திய கற்கருவிகள், முதன் முதலாக கைகளால் செய்த பானைகள், விளைவித்த தானியங்கள் போன்றவற்றைப் பற்றி அறிந்து கொள்ள முடிகிறது.

மனித சமுதாயத்தின் உன்னத வளர்ச்சியை அடுத்து வரும் உலோகக் காலத்தில் காண்கிறோம். இதை இரும்புக் காலம் (Iron Age) என்றும் அழைப்பர். இக்காலத்தின் சிறப்பினை அறிந்து கொள்ள ஈமச்சின்னங்களிலிருந்து கிடைக்கும் சான்றுகளால் அறிய முடிகிறது. இறந்த மனிதனை புதைத்து அந்த இடத்தில் வட்ட வடிவமாக பெருங்கற்களை வைத்து விடுவர்.

இதை பெருங்கற்காலம் (Megalithic Age) எனவும் அழைப்பர். இக்கால ஈமச் சின்னங்களில் கல் திட்டை, கற் குவை, முதுமக்கட் தாழி போன்ற பல வகைகள் காணப்படுகின்றன.தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் இத்தகைய ஈமச்சின்னங்கள் காணப்படுவது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் சானூர், குன்றத்தூர், சித்தன்னவாசல், மோட்டூர், கல்லேரி மலை, தாண்டிக்குடி, கொடு மணல் போன்ற இடங்களில் நடைபெற்ற அகழாய்வுகளின் வழியே உலோக கால மக்களின் வாழ்க்கையைப் பற்றி அறிய முடிந்தது.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் வட்டம் தாண்டிக்குடி பகுதியானது சங்க காலத்தில் வாழ்ந்த, புறநானூற்றுப் பாடல் (399) குறிப்பிடும் "தோன்றிக்கோன்' மற்றும் "கோடைப் பொருநன்' ஆகியோருடன் தொடர்பு படுத்தப்படுவது சிறப்பானது. ஈரோடு மாவட்டம் "கொடுமணல்' என்ற ஊரில் நடைபெற்ற அகழாய்வு மிகவும் முக்கியமானது.

தமிழ் இலக்கியமான திற்றுப்பத்து குறிப்பிடும் "கொடுமணம்' என்ற ஊரே இன்று கொடுமணல் என அழைக்கப்படுகிறது. புகழ்பெற்ற ஆதிச்ச நல்லூர், கோவன்பொட்டல், அமிர்தமங்கலம் போன்ற இடங்களில் நடைபெற்ற முதுமக்கட் தாழிகளின் ஆய்வு தொடர்பான அகழாய்வுகள் பல அரிய சான்றுகளை தந்துள்ளன. அடுத்து வரும் சங்க காலத்தில், தமிழகத்தின் பண்பாட்டுச் சிறப்பினை எடுத்துக் கூறும் பல இடங்களில் அகழாய்வுகள் நடைபெற்றுள்ளன. திருநெல்வேலி மாவட்டம் "மாங்குடி' என்ற ஊரில் அகழாய்வு கடந்த 2002 ஆம் ஆண்டில் நடைபெற்றது. "மதுரைக் காஞ்சி'யின் ஆசிரியரான மாங்குடி மருதனார் பிறந்து சிறப்பித்த ஊர் இதுவே ஆகும்.

இங்கு கிடைத்த தமிழ் எழுத்துப் பொறிக்கப்பட்ட பானை ஓடுகள், படகு குறியீடு பொறிக்கப்பட்ட பானைகள், காசுகள் போன்றவை இவ்வூரின் தொடர்ச்சியான தொன்மைச் சிறப்பினை அறிய அகழாய்வு பெரிதும் உதவியது. ராமநாதபுரம் மாவட்டத்தில் "தேரிருவேலி' என்ற ஊரில் நடைபெற்ற அகழாய்வில் "நெடுங்கிள்(ளி)' என்று சங்க கால மன்னன் பெயர் பொறிக்கப்பட்ட பானை ஓடு கிடைத்தமை குறிப்பிடத்தக்கது. சில நேரங்களில் அகழாய்வுகளின் மூலம் அவ்வூரின் தொன்மைச் சிறப்பினை அறிய இயலும். ராமநாதபுரம் மாவட்டத்தின் வைகையாறு கடலோடு கலக்கும் இடத்தில் அமைந்துள்ள "அழகன்குளம்' என்ற ஊரில் அகழாய்வில் கிடைக்கப் பெற்ற ரோமானிய காசுகள், எழுத்துப் பொறிக்கப்பட்ட பானை ஓடுகள், சங்கு வளையல்கள், ரோமானிய பானை ஓடுகள் போன்றவை இவ்வூர் ஒரு தொன்மையான துறைமுகப் பட்டினம் ஆக இருந்திருக்க வேண்டும் எனக் கருத முடிந்தது.

மேலும், மாமல்லபுரம் அருகே வசவசமுத்திரம், மரக்காணம், தொண்டி, பூம்புகார், பெரியபட்டிணம் போன்ற அகழாய்வுகள் மூலம் கிழக்கு கடற்கரையில் வணிகச் சிறப்பினை அறிய முடிந்தது. பூம்புகாரில் கோவா ஆழ்கடல் ஆய்வு நிறுவனத்துடன் இணைந்து நடத்தப் பெற்ற ஆழ்கடல் அகழாய்வு மூலமாக பூம்புகாரில் கடல் கொண்ட பகுதிகளைப் பற்றி அறிய முடிந்தது சிறப்பானது.

பல்லவ மன்னர்களின் காஞ்சிபுரம், மாமல்லை ஆகிய இடங்களில் அகழாய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. மாமல்லபுரத்தில் படகுத் துறை, சங்ககால முருகன் கோவில் போன்றவை வெளிபடுத்தப்பட்டன. சோழர் கால கோவில்கள் இருக்கின்றன. அகழாய்வில் கிடைத்த தொல்லியல் கலைப் பொருட்கள் கங்கை கொண்ட சோழபுரம் வரலாற்றுக் காட்சியகத்தில் உள்ளன. மேலும், சோழ மன்னர்களின் தலைநகராக விளங்கிய பழையாறை, தாராசுரம், போசள மன்னர்களின் தலைநகராக விளங்கிய கண்ணனூர் (சமயபுரம் அருகில்) சம்புவராயர்களின் தலைநகரான படைவீடு ஆகிய இடங்களில் அகழ்வாராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு, அரிய வரலாற்றுச் சான்றுகள் கிடைத்துள்ளன.

தமிழகத்தில் இதுவரை 100 க்கும் மேற்பட்ட இடங்களில் அகழாய்வுகள் நடைபெற்றாலும், சங்க இலக்கியங்களில் குறிக்கப்பட்டுள்ள ஊர்கள், சங்க கால மன்னர்களைப் பற்றி குறிக்கும் கல்வெட்டுகள் உள்ள இடங்கள், தொன்மைச் சிறப்பு வாய்ந்த பொதிகைமலை, கொல்லி மலை போன்ற ஊர்களில் கள ஆய்வு மற்றும் அகழாய்வுகள் மேற்கொள்ளலாம்.

இதுவரை நடந்த அகழ்வாய்வுகளில் கிடைத்த தொல்லியல் சான்றுகள், பானை ஓடுகள், எழுத்துப் பொறிக்கப்பட்ட பானை ஓடுகள், கலைப் பொருட்கள் போன்றவற்றை ஒருங்கிணைத்து ஒப்பிட்டு நோக்கி ஆய்வினை மேற்கொண்டால் தமிழக வரலாறு உரிய சான்றுகளுடன் மேலும் செம்மை அடையும் என்பதில் ஐயமில்லை.

கருத்துரையிடுக

0 கருத்துகள்

தொடர்புக்கு

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

இதுவரை இந்த வலைப்பூவுக்கு வந்து வாசித்தவர்கள்